(செ.தேன்மொழி)
போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திலேயே அதிகளவான வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஆறு விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் நாடளாவிய ரீதியில் ஆறு வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
குருணாகலை, கல்னேவ, மாவத்தகம, வட்டவல, நுவரெலியா மற்றும் யக்கலை போன்ற பகுதிகளிலேயே இவ்வாறு வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும், முச்சக்கர வண்டி மற்றும் வேனில் பயனித்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் 35 - 64 ஆகிய வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதால், நாட்டின் சில பகுதிகளில் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயத்தை கவனத்திற் கொண்டு வாகன சாரதிகள் செயற்பட வேண்டும்.
மழை காரணமாக வீதிகள் நீர் தன்மையுடன் காணப்பட்டால் வாகனங்கள் குறைந்தளவிலான வேகத்திலேயே செல்ல வேண்டும். அதனை விடுத்து அதிகூடிய வேகத்தில் செல்ல முற்பட்டால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதென்றார்.
No comments:
Post a Comment