கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ச.தொ.ச. விற்பனை நிறுவனத்தின் ஊடாக நிவாரனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ச.தொ.ச. விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று முதல் இரண்டு வார காலத்திற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சின் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது சடுதியாக அதிகரரித்துள்ளது. கொவிட-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
நெருக்கடியான நிலையில் நாட்டு மக்களுக்கு ச.தொ.ச. நிறுவனத்தின் ஊடாக நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி ச.தொ.ச. விற்பனை நிறுவனத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டது.
இதன் காரணமாக ச.தொ.ச. நிறுவனம் அதிக இலாபம் பெற்றுக் கொண்டது. தற்போது அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பா ஒரு கிலோ கிராம், நாடு ஒரு கிலோ கிராம், கோதுமை மா ஒரு கிலோ கிராம், சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம், நெத்தலி 200 கிராம், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரண பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிவாரண பொதி இன்று தொடக்கம் இரண்டு வார காலத்திற்கு ச.தொ.ச. நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும்.
அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையை நிலையாக பேணும் வகையில் தேசிய உற்பத்தியாளர்கள், அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி யாளர்களுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் இம்மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவுப் பெறுகிறது. இவ் வொப்பந்தத்தை நீடிப்பது குறித்து உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment