(செ.தேன்மொழி)
சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுக்காணுவதைப் போன்று உணவு பொருட்கள் மற்றும் மக்களின் அரோக்கியம் தெராடர்பிலும் ஆராய்ந்து, அதற்கான தீர்வை காண வேண்டிய நிலைமை தற்போது ஏற்டபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருவதுடன், இதனூடாக நாட்டு மக்களுக்கு சிறப்புமிக்க எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.
அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிங்கராஜ வனத்தை பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும். இந்நிலையில் வன வள பாதுகாப்பு தொடர்பான சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவதுடன், அதனூடாக வன அழிப்புகள் மற்றும் சுற்றாடல் பாதிப்புகளை தடுத்து நிறுத்த முடியும்.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து நாம் கொள்கை திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அதற்கமைய வன பாதுகாப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், 1988 ஆம் ஆண்டின் தேசிய வன உரிமை தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்வதன் ஊடாக கட்டளைச் சட்டக்கோவையின் சட்டவிதிகள் புறக்கணிக்கப்பட்டால் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். நக்கிள்ஸ் மற்றும் சிவனொளிபாதமலை வனப்பகுதி பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் நாட்டிலுள்ள வனாந்தரங்கள் மற்றும் சிறியளவிலான காடுகள் என்பவற்றினதும், ஆறுகள், நீர் நிலையங்கள் என்பவற்றின் பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல் துறைச்சார்ந்தவர்கள் மற்றும் இது தொடர்பில் அக்கறைகொண்ட அனைவரும் எம்முடன் கலந்துரையாட முடியும்.
தற்போதைய அரசாங்கத்தில் சூழல் தொடர்பில் மட்டுமல்ல உணவுப் பொருட்கள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு பொருட்கள் மற்றும் மக்களின் அரோக்கியம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்து அது தொடர்பான எமது திட்டங்களை தெரிவிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
No comments:
Post a Comment