இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எந்த சாட்சியும் கிடையாதென அறிக்கை தெரிவிக்கிறது - நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எந்த சாட்சியும் கிடையாதென அறிக்கை தெரிவிக்கிறது - நீதி அமைச்சர் அலி சப்ரி

நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் நகைப்புக்குள்ளாக்கி ஒதுக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு அவர்களை பங்காளர்களாக்கிக் கொள்ள வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றியஅவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த தாக்குதலை தடுக்கக் கூடியதாக இருந்தாலும் பொறுப்பானவர்கள் தவறிவிட்டதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இரத்த தாகம் கொண்ட குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முழு முஸ்லிம் சமூகமும் கண்டித்துள்ளது.

இதனுடன் தொடர்புள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது கவலையை தெரிவிக்கிறோம். 

1,100 வருடங்களான ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழும் மக்களை அடிப்படைவாதத்தின் பால் தள்ளுவதாக அமையக் கூடாது. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரிவினையை வளர்ப்பதாக இந்த அறிக்கை இருக்கக் கூடாது.

சுயலாப அரசியலுக்காக இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இனங்களுக்கிடையில் நல்லிணகத்தை குழப்பும் வகையில் இந்த அறிக்கையை பயன்படுத்தக் கூடாது. 

இலங்கையில் வாழும் மொத்த முஸ்லிம்களும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எந்த சாட்சியும் கிடையாதென அறிக்கை தெரிவிக்கிறது. அவ்வாறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சமூகவலைத்தளங்களின் வாயிலாக பரப்பப்படுகிறது. 

சாய்ந்தமருதில் இயங்கிய பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள வீடு அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்தே பிடிபட்டதையும் அறிக்கை குறிப்பிடுகிறது. 

உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்றே குர்ஆன் குறிப்பிடுகிறது. கொடை வழங்குதல், தொழுதல் என்பவற்றைவிட மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள். 

குரோதத்தினால் மேலும் குரோதம் வளரும் என்று புத்தபிரான் போதித்திருக்கிறார். பிரிவு, சந்தேகம், குரோதம், வெறுப்பு என்பவற்றை ஒதுக்கி ஒவ்வொருவர்களுக்குமிடையில் நல்லுறவை வளர்க்கவும், ஒற்றுமையை பேணவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பொதுவான முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை ஆதரிக்கவில்லை. ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.

இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை பரப்பி மக்களை தூரமாக்காது மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும். சந்தேகத்தை ஒதுக்கி கௌரவமான சமூகமாக வாழ்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment