'வன் உம்மா' எனும் வட்ஸ் அப் குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் காத்தான்குடியில் கைது - தொடரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

'வன் உம்மா' எனும் வட்ஸ் அப் குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் காத்தான்குடியில் கைது - தொடரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கட்டாரிலிருந்து 'வன் உம்மா' (ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத்தள குழு ஒன்றினை அமைத்து அதனூடாக அடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படும் மேலும் இருவரை ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிக்கு சென்ற சிறப்பு ரி.ஐ.டி. குழுவினர் அவர்களைக் கைது செய்தனர்.

28, 29 வயதுகளை உடைய குறித்த இரு சந்தேகநபர்களும் தற்போது கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் கட்டாரிலிருந்து கடந்த 2020 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட 6 இலங்கையர்கள் கொண்ட குழுவில் உள்ளடங்குபவர்களாவர். 

ஏற்கனவே அவ்வாறு நாடு கடத்தப்பட்ட நால்வர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ரி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே எஞ்சிய இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கட்டாரிலிருக்கும் போது வன் உம்மா எனும் பெயரில் வட்ஸ் அப் குழுவொன்றினை அமைத்து அதனூடாக அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு மாற்றமான கொள்கைகளை இவர்கள் அந்த வட்ஸ் அப் குழு ஊடாக இலங்கையர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கைகளை ஆதரித்த வகையில் அவர்களது கருத்துப் பரிமாற்றம் அமைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே கட்டார் அவர்களை கைது செய்து சிறைப்படுத்தி வைத்துவிட்டு நாடு கடத்தியதாக கூறும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, அவ்வாறான பின்னணியிலேயே அவர்களை மேலதிக விசாரணைக்காக கைது செய்ததாக தெரிவித்தது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் வெல்லம்பிட்டி, மூதூர் மற்றும் திஹாரி பகுதிகளைச் சேர்ந்த 31, 32, 37, 38 வயதுகளை உடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

'கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அறுவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்துள்ளனர். பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய அவர்கள் கடந்த 2020 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வன் உம்மா வட்ஸ்அப் குழு ஊடாக பல்வேறு வகைகளில் அடிப்படைவாதத்தை பரப்பியுள்ளனர்.' என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், சஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற 'பையத்' சம்பவம் (உறுதி மொழி எடுக்கும் சம்பவம்) தொடர்பான காணொளியும், நிழற்படமொன்றும் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. 

தற்போது வட்ஸ் அப் குழு உறுப்பினர்களே இவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இவ்வாறான பின்னணியிலேயே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் தொடர்கின்றன.

No comments:

Post a Comment