இந்தியாவில் கொரோனாவின் 2 ஆவது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி, இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பான்மையினர் (74.53 சதவீதம்), மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 73 இலட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 28 இலட்சத்து 13 ஆயிரத்து 658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 272 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 43 இலட்சத்து 4 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 812 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 14 கோடியே 19 இலட்சத்து 11 ஆயிரத்து 223 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment