செ.தேன்மொழி
கொவிட்-19 வைரஸ் பரவல் இன்னமும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் வார இறுதி தினங்களில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் நாட்டுக்குள் இன்னமும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் மக்கள் வைரஸ் தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.
வார இறுதி தினங்களான நாளையும், நாளை மறுதினமும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளுக்கு முதலிடம் வழங்கி செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.
இதன்போது தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்வதுடன், அவ்வாறு வெளியில் செல்லும் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்து கொள்ளல் போன்ற சட்ட விதிகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3346 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 3300 எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், இதன்போது அந்த சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக எவரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களை கைது செய்யவதுடன், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டவிதிகளின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment