தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் முஸ்லிம்களின் விடயம் வெற்றி பெற்றுள்ளது - அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளான கருணா, பிள்ளையான் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் : யோகேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் முஸ்லிம்களின் விடயம் வெற்றி பெற்றுள்ளது - அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளான கருணா, பிள்ளையான் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் : யோகேஸ்வரன்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

அரசாங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, அரசாங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.

குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். நாங்கள் இந்நாட்டின் தேசிய இனம். இந்த நாட்டில் அடிமையாக வாழ முடியாது. இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் அடிமைகளல்லர்.

எமக்கு இந்த நாட்டின் உரிமையை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும். இன்னும் சரியான உரிமைகளை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை.

அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட உள்ளக பொறிமுறை எமக்கு திருப்தியளிக்கவில்லை. சர்வதேச நாடுகள் சில பெரும் அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிப்பதன் காரணமாகவும் காணாமல் போன உறவுகள் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்களாக ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதன் காரணமாகவும் சர்வதேச அமைப்புக்கள் சர்வதேச நாடுகளிடம் காணாமலாக்கப்பட்டோர் விடயம் சார்பாக கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கெதிராக சில பிரதேசத்தில் முஸ்லீம் மக்களை கொண்டு எதிராக சிலர் செயற்படுகின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையைத் தந்து கொண்டிருக்கிறது.

அண்மைக் காலத்தில்தான் தமிழ், முஸ்லிம் உறவை ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்து சகல தரப்பிலும் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனால்தான் கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் அரசாங்கத்துக்கெதிராக இருக்கிற அனைத்து தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் இணைந்து முஸ்லிம்கள், தமிழர்கள் சார்பான பிரச்சினையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினார்கள்.

இப்போராட்டத்தில் ஜனாசாவை எரிக்கக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்றவர்களாக அரசாங்கம் இப்போது நல்லடக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான ஒரு போராட்டமாகவே நடைபெற்றது. அதில் இந்த முஸ்லிம்களின் விடயம் வெற்றி பெற்றிருக்கிறது. அதையிட்டு நான் சந்தோஷப்படுகிறேன்.

அத்துடன், குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுவப்படுமாக இருந்தால் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற கருணா என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்று அழைக்கப்படுகின்ற பிள்ளையான் போன்றவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், அவர்கள் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். 

கடந்த காலங்களில் வீட்டுக்கு ஒரு பிள்ளை தர வேண்டுமென்று கிழக்கு மாகாணத்தில் வீடு வீடாக அடித்து பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிடித்தவர்கள். போராட்டத்திற்கு பிள்ளைகளைக் கொண்டு சென்றவர்கள். எமது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு இப்போது சௌகரியங்களை இவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினார்.

No comments:

Post a Comment