அரச அதிகாரிகளை அச்சுறுத்த வேண்டிய தேவை எனக்கு கிடையாது. ஆனால் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்கள் உரிய முறையில் மக்களிடம் சென்றடைவதை அதிகாரிகள் ஊடாக உறுதிப்படுத்த வேண்டியது எனது கடமை என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற மக்கள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் எனது இணைப்பாளர் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இணைத் தலைவரால் முரண்பட்ட கருத்து ஒன்று தெரிவிக்கப்பட்டது.
கருத்து தெரிவித்தவர் என்னை சந்திக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் நான் அவரை இரண்டு தடவைகள் சந்தித்தேன். கலந்துரையாட வேண்டும் என தெரிவித்தேன், அவரும் விருப்பம் தெரிவித்தார் ஆனால் கலந்துரையாட முன்வரவில்லை.
என்னிடம் பிழை இருந்தால் அதனை திருத்திக் கொள்ள நான் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருக்கிறேன். ஆனால் குறை கூறியோர் என்னிடம் பிரச்சினையை தெரிவிக்காமல் உலகம் முழுவதும் சொல்லித் திரிகிறார்கள்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஒரு தேர்தல் தொகுதியில் வருகின்ற நிலையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற திட்டங்களை யார் வேண்டுமானாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியும்.
கிளிநொச்சி அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தார் வழங்கப்பட்டது. ஆனால் நாம் கிளிநொச்சியில் ஒரு நிகழ்வை நடத்துவதற்கு கோரினோம் அனுமதி வழங்கப்படவில்லை.
2010ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது பல ஆயுதக் குழுக்களின் மத்தியிலே எனது அரசியலை ஆரம்பித்தவன். அன்று பயப்படாமல் அரசியலில் ஈடுபட்டதால் மக்கள் எனக்கு வாக்குகள் மூலம் அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள் என்றார்
கோப்பாய் நிருபர்
No comments:
Post a Comment