பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு விதித்த தற்காலிகத் தடையை நீக்கி அதனைத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு (European Commission) வலியுறுத்தியுள்ளது.
அந்தத் தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டோரில் சிலருக்கு மூளையில் இரத்தக் கட்டி ஏற்பட்டதாக அறிக்கைகள் வெளியாயின. இருப்பினும் அந்தத் தடுப்பு மருந்தின் பலன்களில் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஐரோப்பிய மருந்து அமைப்பு கூறியுள்ளது.
அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்ட பின்னர் மூளையில் இரத்தக் கட்டி ஏற்பட்டோரின் எண்ணிக்கை பொதுவாகக் குறைவாகவே உள்ளதாக ஐரோப்பிய உணவு, சுகாதாரப் பாதுகாப்பு ஆணைக்குழு குறிப்பிட்டது.
இருப்பினும் ஐரோப்பிய மருந்து அமைப்பின் மறு ஆய்வுக்கும் பரிந்துரைகளுக்கும் காத்திருப்பதாக அது தெரிவித்தது.
அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று ஐரோப்பிய மருந்து அமைப்பு தெரிவித்தவுடன், தடையை அகற்றத் தயாராய் இருப்பதாக இத்தாலியும் பிரான்ஸும் தெரிவித்துள்ளன.
தற்காலிகத் தடை விதித்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பட்டியலில் சுவீடனும், லத்வியாவும் சேர்ந்துகொண்டுள்ளன.
இதற்கிடையே, அஸ்ட்ராசெனக்கா தடுப்புமருந்து தொடர்பான அறிக்கைகளைப் பரிசீலித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்தைப் போட்டுக் கொள்வதால் மூளையில் இரத்தக் கட்டி ஏற்படுவதாகக் கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அது குறிப்பிட்டது.
No comments:
Post a Comment