ஈஸ்டர் தாக்குதலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இறந்து மீண்டும் பிறந்தவர்களைப் போல கதைக்கிறார்கள் - அமைச்சர் இந்திக அனுருத்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

ஈஸ்டர் தாக்குதலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இறந்து மீண்டும் பிறந்தவர்களைப் போல கதைக்கிறார்கள் - அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர்

“கறுப்பு ஞாயிறு” அன்று எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடியூடன் தங்களது கட்சிக் கொடிகளையும் காட்சிப்படுத்தி கறுப்பு ஞாயிறு தினத்தை அரசாங்கத்திற்கு எதிரான தினமாகப் பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள் என்பதோடு இதனை அவர்கள் அரசியல் இலாபத்தைக் கருதியே செய்திருக்கிறார்கள் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைப்பதற்காக போராடுகிறார்கள் என்பதைக் காட்டவே “கறுப்பு ஞாயிறு” தினத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த எதிர்க்கட்சியினர் இறந்து தற்போது மீண்டும் பிறந்தவர்களைப் போல கதைப்பது ஆச்சிரியமாக இருக்கிறது என்றும் கூறிய அமைச்சர் தாக்குதல் இடம்பெறும் போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருந்தவர்கள் இன்று என்ன நடந்தது என்று எங்களிடம் கேட்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். இது உண்மையிலேயே நகைச்சுவையாக இருக்கிறது என்றும் கூறினார்.

அமைச்சர் இதனை “உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தின் திவூலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட 10 புதிய வீடுகளை பொதுமக்களுக்குக் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

திவூலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் தாகொன்ன கிழக்கு, ஹமுவலான வடக்கு, கெஹெல்அல்ல, பொல்ஹேன, தியகம்பள, பரகொட வடக்கு மற்றும் தெற்கு, குலீகெதர, அஸ்ஸென்னவத்த கிழக்கு மற்றும் பின்னலந்த போன்ற பகுதிகளில் இந்த வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும் இங்கு உரையாற்றிய அமைச்சர் “ஐக்கிய தேசியக் கட்சியூடன் இணைந்து செயற்பட்டவர்கள் புதிதாக இன்றுதான் பிறந்தவர்கள் போல ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது என்று கேட்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்கழுவுக்கு என்ன நடந்தது என்று அன்று தாக்குதலின் போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருந்தவர்கள் இன்று எம்மிடம் கேட்கிறார்கள். 

இன்று தேவாலயம் போக வேண்டாம் குண்டு வெடிக்கும் என்று தந்தை சொன்னதைக் கேட்டு போர்த்திக் கொண்டு உறங்கியவர்கள் இன்று கத்தோலிக்கர்கள் அரசை எதிர்க்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 

கத்தோலிக்க மக்கள் தங்கள் வலியை வெளிப்படுத்துகிறார்கள். இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் பொறுப்புக் கூறுகிறோம் என்று கார்டினல் அவர்கள் நாட்டுக்கும் உலகுக்கும் கூறுகிறார். அந்த மக்களுக்கு நீதி கிடைப்பதற்காகவே போராட்டங்கள் செய்கிறோம் என்று தெரிந்து கொள்வதற்கு கத்தோலிக்க மக்கள் கறுப்பு ஆடை அணிந்தனர். அந்தத் தினத்தில் சிலர் கறுப்பு ஆடை அணிந்து கொண்டு பச்சைக் கொடிகளையும் அணிந்து நின்றனர். இவை இரண்டும் வேறுபட்டவை. 

ஹரினுக்கு கறுப்பு அணியத் தேவையில்லை. அநுர குமாரவிடம் இப்ராஹீமுடன் நடந்த கொடுக்கல் வாங்கல் என்ன? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள ஹரினுக்கு முடியும். கட்சிக்கு எவ்வளவு உதவி செய்தீர்கள்? இப்ராஹீமின் மகன் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தி இறக்கும் வரை என்ன தகவல் கிடைத்தது? இதற்கு விசாரணை அறிக்கை தேவையில்லை.

கேகல்ல கபீர் ஹஷீமுடைய உதவியாளரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஆந்தத் தீவிரவாத நடவடிக்கைக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதை எந்த சிரமமும் இல்லாமல் கண்டுபிடிக்க முடியும். 

ஈஸ்டர் தாக்குதலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இறந்து தற்போது மீண்டும் பிறந்தவர்களைப் போல கதைக்கிறார்கள். வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களைப் பார்க்க ஹக்கீம் காத்தான்குடிக்கும் சென்றார். 

நாங்கள் அதைப் பார்த்தோம். இவர்கள் அனைவரும் இன்று ஐக்கிய மக்கள் முனனணி மற்றும் சஜித் பிரேமதாசவுடனும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். அந்த நபர் விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் உள்ள விடயங்களையும் இந்த நிகழ்வுக்கு காரணமான விடயங்களையும் பேசிச் சொல்லி இருக்கலாம். இது பற்றி இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் அனுப்பி உள்ளோம். முன்பு ஆணைக்குழு அமைத்தார்களே தவிர வேறொன்றும் செய்யவில்லை. ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை மகாநாயக்க தேரர்கள், கார்டினல் ஆண்டகை, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்கு இன்று அனுப்பியுள்ளோம். எல்லோருக்கும் அதை இன்று வாசிக்க முடியும்.

கடந்த அரசாங்கத்தைப் போல சும்மா பிடித்துக் கொண்டு போய் பழிவாங்க எங்களால் முடியாது. கடந்த அரசாங்கம் செய்த பழிவாங்கலை மக்கள் அறிவார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாமல் ராஜபக்ஷ போன்றவர்களை கடந்த அரசாங்கம் பழி வாங்கியது. அந்த பழிவாங்கல்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். 

கடந்த அரசாங்கம் செய்தது போல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தால் கட்டுவாபிட்டிய மக்களுக்கு நியாயம் கிடைக்காது. கட்டுவாப்பிட்டி மக்கள் மற்றும் இந்தப் பேரழிவுடன் பாரபட்சத்திற்கு உள்ளான சகல மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் வரை நாம் போராடுவோம்” என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவூறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் “உங்களுக்கு வீடு- நாட்டுக்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் நாடு முழுவதும் 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் அதேவேளை இரண்டாம் கட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment