தாய்லாந்தில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் கடுப்பான அந்நாட்டு பிரதமர் செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா (Prayuth Chan-ocha) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு ராணுவ புரட்சியின்போது அந்நாட்டு அரசுக்கு எதிராக 3 அமைச்சர்கள் போர்க் கொடி தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக 3 அமைச்சர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. இதனை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் இந்த 3 அமைச்சர்களையும் நீக்கிய பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, அமைச்சரவையையும் மாற்றி அமைத்தார்.
இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் வழக்கமான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்ததும், அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், அந்த 3 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து அமைச்சரவை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினார்.
செய்தியாளரின் இந்த கேள்வியால் கோபமடைந்த பிரயுத் சான் ஓச்சா, மேசை மீது வைக்கப்பட்டிருந்த சானிடைசரை எடுத்துக் கொண்டு செய்தியாளர்களை நோக்கி வந்தார். பின்னர் தனது கையில் இருந்த சானிடைசரை செய்தியாளர்களின் முகத்திற்கு நேரே தெளித்தவாறு புறப்பட்டுச் சென்றார்.
செய்தியாளர்களுடன் கோபமாக பேசியதுடன், அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்காமல் சென்றுவிட்டார். அவரது இந்த செயல்பாட்டை பார்த்து செய்தியாளர்கள் திகைத்தனர்.
பிரதமர் பிரயுத் சாதாரணமாக அனைவரிடமும் பேசக்கூடியவர். சில நேரங்களில் நகைச்சுவையாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தவர். ஆனால் பெரும்பாலும் செய்தியாளர்களை திட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment