(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சிறந்த ஆளுமை, அரசியல் அறிவு நிறைந்த சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா அவர்களது மறைவு பிரதேசத்துக்கு மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சாய்ந்தமருதில் சின்ன மீராலெப்பை யாசீன் பாவா, இஸ்மாலெப்பை பாத்திமா தம்பதிகளுக்கு மகனாக 1937 ஆம் ஆண்டு பிறந்த வை.எம்.ஹனீபா, தனது பாடசாலைக் காலத்திலிருந்தே சமூக சேவையிலும் மார்க்க விடயங்களிலும் சிறந்து விளங்கினார்.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களோடு, நெருங்கி அரசியல், சமூகப் பணி செய்த இவர், பல்வேறு விடயங்களில் சமூகத்துக்காக குரல் கொடுத்தார்.
2002ஆம் ஆண்டு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தில் இணைந்த இவர், 2012ஆம் ஆண்டு நம்பிக்கையாளர் சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அன்றிலிருந்து மரணிக்கும் வரை தலைவராக சிறப்பாக கடமையாற்றி பணிசெய்த ஒருவராகவும் வை.எம் ஹனீபா திகழ்ந்தார்.
சாய்ந்தமருதில் நவம்பர் புரட்சி ஏற்பட்ட சமயம் அதன் அச்சாணியாக இருந்து சிறந்த முறையில் அதனை நெறிப்படுத்தி, வழி காட்டிய பெருமை இவரையே சாரும்.
நீண்ட காலமாக அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகத்தை ஒரு வழியில் முன்னெடுத்துச் செல்வதில் சிறப்பாகச் செயலாற்றினார்.
வை.எம். ஹனீபா போன்ற நல்ல சிந்தனை உள்ள, தூரநோக்குள்ள தலைவர்கள் சமூகத்துக்குத் தேவைப்படும் சந்தர்ப்பத்திலே அவர் எம்மை விட்டுப் பிரிந்திருக்கின்றார்.
அவருடைய மறைவு குறித்து முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது. அன்னாருக்கும், அன்னாருடைய மறுமைக்காகவும் பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றது.
No comments:
Post a Comment