உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மதிப்பீடு செய்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையானது எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை உப குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
12,13,14ஆம் திகதிகளில் அமைச்சரவை உப குழுவானது தொடர்ச்சியாக கூடி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
கடந்த புதன்கிழமை அமைச்சரவை உப குழுவின் முன்னிலைக்கு குற்றப் புலவாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் விசேட பொலிஸ் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பில் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
ஆணைக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் கல்வி, மத மற்றும் பாதுகாப்பு துறையினருடன் அமைச்சரவை உப குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக ஜனாதிபதியால் கடந்த மாதம் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த அமைச்சரவை உப குழுவின் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முறையாக கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment