மார்ச் 2016 இல் இடம்பெற்ற மத்திய வங்கியின் இரண்டு பிணைமுறி ஏலங்கள் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்ய, மூவரடங்கிய இரு வெவ்வெறு குழாங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கமைய, பிரதம நீதியரசரினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
முதலாவது குழாமில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி.எஸ். தொட்டவத்த, மஞ்சுள திலகரத்ன, எம். இராஸ்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது குழாமில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான, அமல் ரணராஜா, ஆதித்ய பட்டபெந்திக, நாமல் பலல்லே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில், விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை அமைக்குமாறு, சடடமா அதிபர் கடந்த வாரம் (11), பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை (15) தனித்தனியான இரு நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால், கடந்த 2016 மார்ச்சில் இடம்பெற்ற இரு வெவ்வேறு முறி ஏலங்கள் தொடர்பில் விசாரணை செய்ய இரு வெவ்வெறு நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment