(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசாங்கத்தையும், கூட்டணியையும் பாதுகாக்க ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியமாகும் அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். முறையற்ற செயற்பாடுகளினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் 11 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சஜ்வீவ எதிரிமான்ன குறிப்பிட்டதாவது, பாரிய எதிர்பார்ப்பினை கொண்டு நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அரசாங்கம் குறித்து அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள் முறையற்றதாக காணப்பட்டுள்ளது. பேச்சு சுதந்திரம் உள்ளது என்ற காரணத்திற்காக அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படக் கூடாது.
பாரிய போராட்டத்திற்கு மத்தியில் பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 44 பேரும் ஒன்றிணைந்துள்ளோம்.
எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை காட்டிலும் எமது பலம் அதிகமாக உள்ளது. ஆகவே அரசாங்கத்தை பலவீனப்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளை எதிர்க்கட்சியினர் கைவிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment