பாடசாலை அபிவிருத்தியில் அரசியலை பயன்படுத்தாமல் மாணவர்களின் நன்மை கருதி திட்டங்களை செயற்படுத்த முன்வர வேண்டும் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

பாடசாலை அபிவிருத்தியில் அரசியலை பயன்படுத்தாமல் மாணவர்களின் நன்மை கருதி திட்டங்களை செயற்படுத்த முன்வர வேண்டும் - இராதாகிருஸ்ணன்

நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது. உடனடியாக அவற்றை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களின் நன்மையை கருத்தில் கொண்டு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டது.

அப்படி அபிவிருத்தி செய்யப்பட்ட பாடசாலைகள் வேலைகள் நிறைவடைந்த பாடசாலைகள் திறக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டு அதன் பயன்களை மாணவர்கள் அனுபவித்து வருகின்றார்கள்.

ஆனால் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பல பாடசாலைகள் இன்னும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு அவற்றை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படாமல் அந்த கட்டிடங்கள் தற்பொழுது பாழடைந்த நிலையில் இருக்கின்றது. ஒரு சில பாடசாலைகளில் வேலைத்திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது.

இதன் மூலம் அரசாங்கம் செலவு செய்த கோடிக் கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றது. எனவே உடனடியாக அரசாங்கம் இது தொடர்பாக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கம் ஆரம்பித்த வேலைகளை நாங்கள் முன்னெடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இல்லாமல் யார் அபிவிருத்தி செய்தாலும் அது எங்களுடைய மாணவர்களையே சென்றடையும் என்ற நோக்கத்தில் செயற்பட முன்வர வேண்டும்.

அது மாத்திரம் அல்ல இந்திய அரசாங்கம் 9 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 300 மில்லியன் ரூபா வழங்கியது. அதற்கான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த வேலைத் திட்டமும் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவு செய்தால் இன்னும் சில பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மூலமாக நிதியை கோர முடியும்.

எனவே பாடசாலை அபிவிருத்தியில் அரசியலை பயன்படுத்தாமல் அதனை மாணவர்களின் நன்மை கருதி முன்னெடுக்கின்ற ஒரு திட்டமாக அதனை செயற்படுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையக நிருபர் தியாகு

No comments:

Post a Comment