கருணா அம்மான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம் - பா. அரியநேத்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 10, 2021

கருணா அம்மான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம் - பா. அரியநேத்திரன்

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

கருணா அம்மான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு ஊடகவியலாளர்களை சந்தித்து யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டதற்கு எதிரான ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் பேசும் மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு இராணுவ ஆட்சியின் துணை வேந்தராக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் செயற்படுகின்றாரா? என்கிற பாரதூரமான சந்தேகம் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டு இருக்கின்றது.இடித்து அழிக்கப்பட்ட இந்நினைவு தூபி இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. விரிவுரையாளர்களும் மாணவர்களும் சேர்ந்து உருவாக்கினார்கள். போரால் இறந்த மக்களுக்கு உலக நாடுகளில் எல்லாம் நினைவு தூபிகள் இருக்கவே செய்கின்றன.

ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஸ வந்தது முதல் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக தழிழ் முஸ்லீம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தேச்சையாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் இராணுவ ஆட்சியின் துணை வேந்தராக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செயற்படுகின்றாரா? என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

உரிய அனுமதி பெறப்படாமல் இந்நினைவு தூபி அமைக்கப்பட்டு இருந்தால் இதை இடித்து அகற்ற வேண்டிய தேவையே கிடையாது. மாறாக அனுமதியை பெறுவதற்கான முன்னெடுப்புகளையே துணைவேந்தர் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இராணுவ பாணியில் நடந்து இருக்கின்றார். அழிக்கப்பட்ட இடத்தில் நினைவு தூபியை மீண்டும் அமைத்து தருவதன் மூலம் பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்று அவரை கேட்டு கொள்கின்றேன்.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அமைச்சர்கள் அவர்களின் கைக்கூலிகள் அல்லது எடுபிடிகள் என கூறுவது வரலாறு ஆகும்.நானும் 2004 ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு மாறுபவர்களாக இருக்கலாம் அல்லது தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்ற எல்லோரும் அரசாங்கம் சொல்கின்ற கிளிப்பிள்ளை அரசியலை செய்பவர்கள்.தவிர அவர்கள் சுயமாக இயங்குபவர்கள் அல்லர்.வடகிழக்கில் இருந்து அரசாங்கத்துடன் உறவாடி முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கின்றவர்களுக்கும் எமது மக்களின் வாக்குகளை பெற்று அரசாங்கத்திற்கு சோரம் போய் இருக்கின்ற தமிழ் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் என பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள் இதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இதற்கு மாத்திரமல்லாது அம்பாறை மட்டக்களப்பு பகுதியில் பறி போய்க்கொண்டிருக்கின்ற மேய்ச்சல் தரையை காப்பாற்றுவதற்கு கூட குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு குரல் கொடுப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.எம்மால் இதற்கு குரல் கொடுங்கள் என வேண்டுகோள் மாத்திரமே இவர்களுக்கு தெரிவிக்க முடியும்.

அடுத்து விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவரின் மற்றைய பெயரை நான் பாவிப்பதில்லை.கடந்த கால விடுதலை போராட்ட காலங்களில் செயற்பட்டு இயக்கத்தை இரண்டாக பிரிப்பதற்கு காரணகர்த்தாவாக செயற்பட்டவர்.எமது அம்பாறை மாவட்டத்தில் கப்பலில் சென்று தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தவர்.அவர் கிளிநொச்சிக்கு சென்று ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.நானும் எல்லா அரசியல் வாதிகளுடனும் கதைத்திருக்கின்றேன்.மாவை சேனாதிராஜாவுடன் உறவு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.கதைப்பது என்பது வேறு உறவு என்பது வேறு.இவ்வாறு அரசியல் வாதிகளுடன் கதைப்பதற்காக உறவு என்று சொல்ல முடியாது.ஏற்கனவே இவர் பிரதி அமைச்சராக இருந்துள்ளமையினால் கதைத்திருக்கலாம்.இவ்வாறானவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைப்பதென்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.கடந்த 2001 ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.நானும் மூலகர்த்தாவாக இருந்தேன் என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியில் விடுதலை புலிகளில் இருந்து பிரிந்து சென்று அல்லது அவர்களை காட்டி கொடுத்துவிட்டு ஒரு உன்னத போராட்டத்தை சிதைத்துவிட்டு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வருவதாக இருந்தால் அவரது விருப்பம்.ஆயினும் கட்சியில் உள்ள தலைமைகள் அதில் சிந்தித்து முடிவெடுக்கும்.

இவருக்கு அரசாங்கத்துடன் சம்பந்தம் உள்ளது.விடுதலைப்போராட்டத்தை காட்டி கொடுத்துவிட்டு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவகத்தை உடைத்தமை தொடர்பில் உறுதியாக கூற முடியாது.சிலநேரம் ஆலோசனை அரசாங்கத்திற்கு இவர் கூறி இருக்கலாம்.ஆதாரமில்லாமல் இதை கூற முடியாது.இருந்த போதிலும் இவரை முள்ளவாய்க்கால் நினைவகத்தை அழித்தமை தொடர்பில் இவரை ஒரு ஆளாக நான் பார்க்கவில்லை.

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் மத்தியிலும் ஒரு கருத்து நிலவுகின்றது.இந்தியாவின் பொறுப்புவாய்ந்த பதவியில் உள்ள ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்து மறுதினமே இந்நினைவகம் இடிக்கப்பட்டுள்ளது என்றால் அவர்களின் ஆசியும் இருக்கின்றதா என்கின்ற சந்தேகமும் இருக்கின்றது.சில வேளை இருக்கலாம்.இல்லை என்று கூற முடியாது.இவ்வாறு தான் முள்ளிவாய்க்கால் அழிப்பில் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இருந்தது.இந்திய அரசாங்கத்தின் அணுசரனையுடன் தான் முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றது என்கின்ற பார்வை அந்தாளில் கூறப்பட்டது.அந்த வகையில் ஜெய்சங்கர் வந்து சென்றதன் பின்னர் இடிக்கப்பட்டது என்பதில் சந்தேகம் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளோம்.இதில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டியுள்ளது.

தற்போது உள்ள குடும்ப ஆட்சியினால் பல்வேறு பட்ட தடைகள் அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றது.தமிழ் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இவ்வச்சுறுத்தல்கள் தொடர்கின்றது.எனவே இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிப்புக்கு எதிராக வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் பூராகவும் நடத்தப்படுகின்ற ஹர்த்தால் - கதவடைப்பு போராட்டத்துக்கு தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த அனைத்து தரப்பினருமே பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டு கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment