பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொவிட்-19 தொற்று நோய்க்கு உள்ளாக்கியுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி உரிய ஆலோசனைகளைப் பெற்றிருப்பதாகவும், கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்த சகல இடங்களையும் கிருமி நீக்கத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
பாராளுமன்ற பணியாளர்கள் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு பி.சி.ஆர் (PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம், எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற வளாகத்திலேயே பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்ற பணியாளர்கள் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாகப் பின்பற்றி கடமைகளை முன்னெடுத்து வருவதாகவும், இந்த நிலைமையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாகவும் தஸநாயக்க குறிப்பிட்டார்.
அதேநேரம், அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிக்கும் நோக்கில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை 13 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குக் கூடவுள்ளது.
இதில், சாபாநயகர் மற்றும் கட்சித் தலைவர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல செயலகம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment