நாட்டின் சிவில் நிர்வாகம் முழு இராணுவ மயமாகிறது, கொரோனா விடயத்தில் இராணுத்தினர் இணைக்கப்பட்டமை பேராபத்து என்கிறார் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

நாட்டின் சிவில் நிர்வாகம் முழு இராணுவ மயமாகிறது, கொரோனா விடயத்தில் இராணுத்தினர் இணைக்கப்பட்டமை பேராபத்து என்கிறார் ரவூப் ஹக்கீம்

(ஆர்.ராம்)

நாட்டின் சிவில் நிருவாகத்துறையானது முழுமையான இராணுவ மயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிருவாகத்துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

நாட்டின் பாதுகாப்புத்துறை தவிர்ந்த வெளிவிவகாரம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவ்விதமான படை அதிகரிகள் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் என்று பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஜனாதிபதி படை அதிகரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் நடைமுறைச் சாத்தியமாக்கலாம் அல்லது அவர்களுடன் பணியாற்றுவது தனக்கு இலகுவானது என்று கருத முடியும்.

அதற்காக, சிவில் நிருவாகத்தில் மேலும் மேலும் படை அதிகரிகளை இணைத்துக் கொள்கின்றமையாது நாட்டில் படைத்துறையை மையப்படுத்திய நிருவாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தினை உருவாக்குவதாக உள்ளது.

விசேடமாக, கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமயிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொண்டாலும், அதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமித்தமை, தற்போது மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.

விசேடமாக, கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கருத்திற்கொள்ளப்படாது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் தமக்கான அடிப்படை உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெகுஜனப் போராட்டங்கள் வாயிலாக ஆதங்கங்கள் நாடாளவிய ரீதியில் வெளிக்கிளம்பியுள்ளன.

இத்தகையதொரு சூழலில் மாவட்ட ரீதியாக கொரோனா விடயங்களை கையாள்வதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையானது அவர்களின் நியாயமான கோரிக்கையை இராணுவத்தினைப் பயன்படுத்தி அடக்குமுறை ஊடாக முடிவுக்கு கொண்டுவருதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே, முஸ்லிம்களின் உணர்வு ரீதியான விடயங்களில் தொடர்ச்சியாக காண்பிக்கப்படும் பாரபட்சங்களால் அந்த மக்கள் கொதித்துப்போயுள்ள நிலையில் இராணுவத்தின் ஊடாக அவர்களின் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்த முனைவதானது மிகத்தவறானதொரு அணுகுமுறையாகும்.

அதுமட்டுமன்றி, ஜனநயாகவிரோத செயற்பாடுமாகும். எனவே இவ்விதமான சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment