(செ.தேன்மொழி)
அம்பலங்கொட - மீட்டியாகொட பகுதியில் பெண் தாதி ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அம்பலங்கொட - மீட்டியாகொட பகுதியில் மல்வென்ன ரயில் பாதைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற குறித்த சந்தேகநபர் அந்த வழியில் சென்று கொண்டிருந்த 36 வயதுடைய பெண் தாதி ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது பிரதேசவாசிகள் அவரை விரட்டிப் பிடிப்பதற்காக, துரத்திச் சென்றுள்ளனர். பின்னர் சந்தேகநபர் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் எண்ணத்தில் அங்கிருந்த கால்வாயிலில் பாய்ந்துள்ளார்.
நீரில் மூழ்கிக் கொண்டிருந்த நபரை பிரதேசவாசிகள் இணைந்து மீட்டு ஹிக்கடுவ - ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களினால், இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனால் மக்கள் நடமாட்டம் குறைவான மற்றும் வெளிச்சம் குறைவான பகுதிகளில் செல்லும் பெண்கள் இந்த கொள்ளையர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment