(செ.தேன்மொழி)
கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கைதியொருவருக்கு வழங்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக பொதியொன்றை பெற்று வைத்திருந்த சிறைச்சாலை அதிகாரியின் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்றுவரும் கைதியொருவருக்கு வழங்குமாறு கொடுக்கப்பட்ட உணவுப் பொதியொன்றை, அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரியொருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்போது, சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியின் அறை சோதனைச் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பொதியொன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த பொதியில் உணவு, 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரியின் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment