வெலிகம பகுதியில் மாத்தறை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பகுதியில் நேற்று பிற்பகல் 3.50 மணியளவில், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரை, பிரிதொரு பஸ் நடத்துனர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தின் போது பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்துள்ள பஸ் நடத்துனர் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹக்மன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பஸ் நடத்துனர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவருக்கு சொந்தமான பஸ்ஸிலே அவர் நடத்துனராக செயற்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அம்பலன்கொட பஸ் தரிப்பிடத்தில் வைத்து கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்த பஸ் நடத்துனருக்கும், பிரிதொரு பஸ் நடத்துனருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமையின் காரணமாகவே, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ள வெலிகம பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment