(செ.தேன்மொழி)
சிறைச்சாலைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளக்கமறியல் கைதியொருவருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்தே வருகின்றது. அதற்கமைய நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவருக்கு மாத்திமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 129 சிறைச்சாலை அதிகாரிகளும், 474 ஆண் சிறைக் கைதிகளும், 11 பெண் சிறைக் கைதிகளும், 3,410 ஆண் விளக்கமறியல் கைதிகளும், 234 பெண் விளக்கமறியல் கைதிகளும் உள்ளடங்களாக, 4,258 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 876 பேர் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும், 853 பேர் மெகசின் சிறைச்சாலையிலும், 809 பேர் மஹர சிறைச்சாலையிலும், 424 பேர் கொழும்பு விளக்கமறியல் சிறைசாலையிலும், 348 பேர் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் சேர்ந்தவர்கள்.
இதன்போது, வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 121 சிறைச்சாலை அதிகாரிகள் குணமடைந்துள்ளடன், 3 ஆயிரத்து 777 கைதிகளும் இவ்வாறு குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 8 அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருவதுடன், 344 கைதிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்போது சிறைச்சாலைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 8 பேரே இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment