போர்ச்சுக்கல் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டி சோசா (Marcelo Rebelo de Sousa) 61.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள நாடுகளில் போர்ச்சுக்கல் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் கடுமையான கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் போர்ச்சுகலில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய ஜனாதிபதியும் மைய வலதுசாரியுமான மார்சிலோ ரெபெலோ டி சோசா மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.
கொரோனா காலமென்பதால் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக வழக்கத்தைவிட அதிகப்படியான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கட்டாய முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆனாலும் சமீபத்திய தேர்தல்களில் இல்லாத வகையில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கின.
அதன்படி ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டி சோசா 61.5 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் ஜனாதிபதியாக இருப்பார்.
No comments:
Post a Comment