நெல்லியடியில் பிரபல கல்லூரியொன்றின் உயர்தர மாணவன் ஒருவர் சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோது சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (04) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் தந்தையர் இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்துவரும் கடுக்காய், கட்டைவேலி, கரவெட்டியை சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்ற மாணவனும் அவருடைய நண்பர்களும் நுணுவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்துள்ளார் என்றும், அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கைகளை விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நீச்சல் தெரிந்தவர்கள் விரைந்து சென்று, குறித்த மாணவனை காப்பாற்ற முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம், அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment