ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தனது வீட்டில் சுயதொழிலுக்காக பொருத்தப்பட்டுள்ள மா அரைக்கும் இயந்திரத்தில் தவறுதலாக கூந்தல் சிக்கிக் கொண்டதில் பெண் ஸ்தலத்திலேயே மரணமான சம்பவமொன்று வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் வெலிக்கந்தை மஹிந்தாகம கடவத்தமடு கிராமத்தில் வசிக்கும் சந்திரிகா (வயது 39) எனும் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வழமைபோன்று இவர் மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது கூந்தல் தவறுதலாக தற்செயலாக மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது.
அதனால் அவர் இயந்திரத்தினால் பலமாகச் சுழற்றப்பட்டு ஸ்தலத்திலேயே இறந்துள்ளார்.
தனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ்ந்து வரும் திருமணமாகாத இந்தப் பெண் தனதும் தாயினதும் வாழ்வாதாரத் தொழிலாக இவ்வாறு மா அரைக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment