மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிக்க வவுனியா, மன்னாரில் தடை விதித்தது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிக்க வவுனியா, மன்னாரில் தடை விதித்தது நீதிமன்றம்

மன்னார், வவுனியா பிரதேசங்களில், எதிர்வரும் வாரம் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிக்க, நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்றையதினம் (19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் தினத்தை நினைவுகூர இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் வவுனியா பொலிஸாரினால், மன்னார் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த நீதிமன்ற கட்டளையை பொலிஸார் பெற்றுள்ளனர்.

மன்னாரில் 5 பேருக்கும், வவுனியாவில் 8 பேருக்கும் எதிராக நீதிமன்றம் தடையுத்தரவை வழங்கியுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் கருத்து தெரிவிக்கையில், மன்னார் பொலிஸார் இன்றையதினம் (19) மன்னார் நீதிமன்றத்தில், எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் மாவீரர் தினத்தை நினைவுகூருவதற்கு தடையுத்தரவு கோரியிருந்தனர். அதற்கமைய, நீதிமன்றத்திடமிருந்து பொலிஸார் குறித்த தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

அத்துடன் வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சுரேந்திரன் ரவல், அன்ரன் றொஜன் ஸ்ராலின், வி.எஸ். சிவகரன் மற்றும் அலக்ஸ் றொக்ஸ் ஆகிய 5 பேருக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் எதிர்வருகின்ற 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாவீரர் தினத்தை நினைவுகூரக் கூடாது எனவும், மாவீரர் தினத்தில் பொதுமக்களை ஈடுபடுத்துவதை தடுக்கும் வகையிலும் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவானது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள், மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் சட்டத்திற்கு அமைவாக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.என சட்டத்தரணி எஸ்.டிணேசன் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர்- எஸ். றொசேரியன் லெம்பேட்)

No comments:

Post a Comment