திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கர வண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை மூன்றாம் கட்டை - வளர்மதி வீதியில் வசித்து வரும் இலங்கை போக்குவரத்துச் சபை திருகோணமலை கிளையில் காப்பாளராக கடமையாற்றி வரும் தங்கராஜா அருணன் (36 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியில் தனது தந்தையை மரத்தடி பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று மீண்டும் அவரது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த போதே முருகாபுரி பகுதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த காப்பாளரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment