(நா.தனுஜா)
தமிழ் மக்கள் சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை இழந்து, தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக இருக்கின்றனர். எனினும் அவர்கள் சுயத்தோடும் இறைமையோடும் தங்களுக்கேயுரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே உறுதி செய்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது தமிழ் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழ்ந்த மக்களாவர். அவர்கள் தமக்கே உரிய பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களோடு இந்த மண்ணின் பூர்வீகக்குடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது உணவுப் பழக்க வழக்கங்களையே இழந்து, தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக காணப்படுகின்ற சூழ்நிலையிலும் தமது பாரம்பரியங்களை இழக்கக்கூடாது என்பதற்காகவே அம்மாச்சி போன்ற உணவகங்களின் ஊடாக தமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரியொருவர் எமது மக்களை பிட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையிலிருந்து பீட்ஸா சாப்பிடும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர்கள் எமது மக்களை சிதைத்து, படுகொலை செய்து, சின்னாபின்னப்படுத்தியிருக்கிறார்களே தவிர வேறெந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை.
எனவே அவர்கள் சுயத்தோடும் இறைமையோடும் தங்களுக்கேயுரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே நிலைநாட்டியிருக்கின்றது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை பொலிஸ் அதிகாரியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்குத் தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருக்கும் கனேடிய தூதுவர் டேவிட் மெக்கினொன், 'முதலில் அந்த அதிகாரியை அம்மாச்சி உணவகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment