மாவீரர் தின நிகழ்வுகளைத் தடையின்றி நடத்துவதற்கு தேவைப்படின் அரசாங்கத்துடன் பேசுவோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடினர்.
வட மாகாண சபை அவைத் தலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானத்தின் நல்லூர், முத்திரைச்சந்தையடியிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
நேற்றையதினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம். அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் தமிழ் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசுவதெனத் தீர்மானித்திருந்தோம்.
மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம். அந்தந்த துயிலுமில்ல பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீர்மானித்தோம்.
கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதனை அடுத்த வாரமளவில் அறிக்கை மூலம் வெளியிடுவோம்.
மாவீரர் தின நினைவேந்தலின் ஊடாக இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். மாவீரர் தின நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம் என்றார்.
நேற்றைய கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், புளொட் அமைப்பின் சார்பில் அதன் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கஜதீபன், ரெலோவின் சார்பில் யாழ்.மாநகர சபை பிரதி மேயர் ஈசன், பிரதிநிதிகள், அருந்தவபாலன் உட்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் ஐங்கரநேசன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment