தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கத்துக்காக சர்வதேசத்துடன் பேசத் தயார் - பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை மறந்து செயற்படுகின்றனர் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கத்துக்காக சர்வதேசத்துடன் பேசத் தயார் - பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை மறந்து செயற்படுகின்றனர் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதனால் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கத்துக்காக சர்வதேசத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மேலோங்கியிருக்கும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் தடுப்பூசிகளை ஆராய்ந்து வருவதுடன் ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து அதனை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றன. ஆனால் கொவிட்டுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள எமது அரசாங்கம் இதுவரை அவ்வாறான எந்த ஒப்பந்தத்தையும் எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளவில்லை.

மேலும் நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு தேவையான லெண்டிலேட்டர் உபகரண பிரச்சினைக்கு இன்னும் தீர்வில்லை. வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தீர்வில்லை. ஆனால் கொராேனாவை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கொராேனா தொற்றை பரிசோதிக்கும் கருவிகளை இறக்குமதி செய்வதற்கு, தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில், தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவதற்கு என அனைத்தும் வியாபாரமாகி இருக்கின்றது.

அத்துடன் இலவச சுகாதாரம் வழங்கும் எமது நாட்டில் கொவிட்டுக்காக வழங்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். அதனை வழங்கும் வரை நாங்கள் மக்களுக்காக போராடுவோம். வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இருந்து வருகின்றன. அந்த பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் தீர்வில்லை. 

மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது மக்களை மறந்து செயற்படுகின்றது. மேலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பழிவாங்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் அமைச்சுக்களில், கூட்டுத்தாபனங்களில் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கானவர்களை தங்கள் தொழிலில் இருந்து வெளியேற்றி இருக்கின்றனர்.

பலர் தூர இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அரச ஊழியர்களுக்கு நாங்கள் அனுமதித்த சம்பள உயர்வை நிறுத்தியிருக்கின்றது. அதேபோன்று ஓய்வூதியர்களின் நிதியத்துக்கு கிடைக்க இருந்ததை முற்றாக இல்லாமலாக்கி இருக்கின்றது.

அத்துடன் மக்கள் நிவாரணம் கேட்பதில்லை என பிரதமரின் வரவு செலவு திட்டத்தில் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அரசாங்கத்துக்கு மிகவும் ஆதரவாக இருக்கும் அபேயராம விகாரை தேரர்கள் நிவாரணம் கேட்டு இன்று வரிசையில் இருக்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் வரி குறைப்பை மேற்கொண்டு தனவந்தர்களுக்கு நிவாரணம் வழங்கியது. அதனால் நாட்டின் வருமானம் 600 மில்லியன் ரூபா இல்லாமலாகி இருக்கின்றது. அதனால்தான் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாமல் இருக்கின்றது.

கொவிட் காரணமாக பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வங்குராேத்து நிலைக்கு சென்றிருக்கின்றன. அவற்றுக்கு நிவாரணம் இல்லை. நிதி நிறுவனங்களுக்கு கடன் நிவாரணம் வழங்கி இருக்கின்றது. அந்த நிவாரணம் சில காலத்தில் வட்டியுடன் கடனை செலுத்த வேண்டும். அது நிவாரணம் அல்ல. அதனால் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இன்று கனடா அரசாங்கம் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றது. அந்த நாட்டுடன் நாங்கள் பேச தயாராக இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment