மக்கள் ஆணையுடன்தான் ஜெனிவா தீர்மானத்தில் இருந்து வெளியேறினோம் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலளித்தார் அமைச்சர் வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

மக்கள் ஆணையுடன்தான் ஜெனிவா தீர்மானத்தில் இருந்து வெளியேறினோம் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலளித்தார் அமைச்சர் வாசுதேவ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

எமக்குள்ள மக்கள் ஆணையினைக் கொண்டு அமெரிக்கா கொண்டுவந்த ஜெனிவா தீர்மானத்தில் இருந்து வெளியேறவும், இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், நியாயத்தை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதையும் அரசாங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என நீர் வளங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.

இன்றுள்ள நெருக்கடியான பொருளாதார நிலைமையில் 20 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான இறக்குமதிகளை செய்ய முடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு அச்சுறுதல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது, எமது இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டாம் என அவர்கள் கூறுகின்றனர், அவர்களா எமக்கான வெளிநாட்டு கையிருப்பை தருகின்றனர். இதே விடயத்தை சர்வதேச நாணய நிதியம் எப்போதுமே கூறிக் கொண்டிருந்தது.

நாட்டில் இறக்குமதியை அளவுக்கதிகமாக இடமளித்து எமக்கு தேவையானவற்றை இறக்குமதி செய்யக்கூறியும் அதற்காக தேவையான கடன்களை தாம் தருவதாக கூறினர். இதுதான் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது, இதனால்தான் ரூபாவின் பெறுமதி மோசமாக விதத்தில் வீழ்ச்சி கண்டது. இதனால் வட்டி வீதம் அதிகரித்தது. 

இதனையெல்லாம் குறைக்க வேண்டும் என்றும் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் நாம் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலில் பதில் கூறியுள்ளனர், மக்கள் ஆணையுடன் நாம் இதற்கான பதிலை கூறியுள்ளோம்.

இதே மக்கள் ஆணையுடன்தான் அமெரிக்கா கொண்டுவந்த ஜெனிவா தீர்மானத்தில் இருந்து வெளியேறினோம். எமக்கு கிடைத்த மக்கள் ஆணையை கொண்டே நாம் அவ்வாறான தீர்மானம் எடுத்தோம். 

ஆகவே எமக்குள்ள ஆணையின் பிரகாரம் இந்த தீர்மானத்தில் இருந்து வெளியேறவும், இந்த நாட்டின் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், இந்த நாட்டின் நியாயத்தை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

நாம் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துக் கொள்வோம், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவு வேண்டும் என்ற கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை, ஆனால் இன்றுள்ள நெருக்கடியான நிலையில் 20 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான இறக்குமதிகளை செய்ய முடியாது என நாம் கூறுவதில் என்ன தவறுள்ளது. 

உலக வர்த்தக உடன்படிக்கையில் ஒரு நாடு முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் என்னவென்பது கூறப்பட்டுள்ளது, அதற்கமைய நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment