நாட்டில் தற்பொழுது பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகும். இவர்களுள் நேரடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்று கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய மரணங்கள் ஏற்பட்டுள்ளமை தொற்றா நோய் நிலைமை அதிகரித்தமையே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். (உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பு)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முடக்கல் நிலையில் இருக்கும் போதுகூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை தாங்கள் நிறுவியுள்ளோம். நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்
உலக நாடுகளில் தற்போதைய வைரஸ் காரணமாக பலர் தொற்றக்குள்ளாகியதுடன் பலர் உயிரிழந்தும் உள்ளனர். நமது நாட்டில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்ட வகையில் நேரடியான பாதிப்பில் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாம் பொதுமக்களிடம் வேண்டிக் கொள்வது என்னவெனில், வரலாற்றிலிருந்து இலங்கையில் உன்னதமான சுகாதார சேவை இருந்து வருகிறது. தற்பொழுது இந்த சுகாதாரதுறை அதிலிருந்து மிகவும் மேம்பட்ட நிலையில் செயற்படுகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றை வெற்றி கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 4 தினங்களுக்கு மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
விசேடமாக மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் முடிந்த வரையில் பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்திற்குள் மாத்திரம் இருக்க வேண்டும் என்று நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். அந்த பகுதிக்குள் மாத்திரம் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment