பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும், ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க ஒன்றிணைவோம் : எதிர்க்கட்சி தலைவர் சஜித் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும், ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க ஒன்றிணைவோம் : எதிர்க்கட்சி தலைவர் சஜித் அழைப்பு

(செ.தேன்மொழி) 

மிகவும் பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும், ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்திருக்கின்றார். 

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். 

சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கு முதலிடத்தை வழங்க வேண்டும் என்பதை உலக வாழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகளாவிய ரீதியில் இன்றைய காலகட்டித்தில் சிறுவர்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. 

அதற்கமைய உலகம் முழுவதிலும் நாள் ஒன்றுக்கு 16,000 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். இவர்களுள் 50 சதவீதமான சிறுவர்கள் மந்த போசனத்தினால் உயிரிழப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளை வீட்டு பணியாளர் சேவைகளில் ஈடுபடுத்தல் என்பன பாரிய நெருக்கடிகளாக காணப்படுகின்றன. 

போட்டி நிறைந்த இந்த உலகத்தில் பிள்ளைகள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுவர் உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மேலும் வலுப்பொருந்தியதாக மாற்ற வேண்டிய தேவையும் தற்போது மேலோங்கியுள்ளது. 

சிறுவர் தினம் போன்று முதியோர் தினமும் இன்று கொண்டாடப்படுகின்றது. முதியவர்களை கவனிப்பது என்பது புண்ணியமான செயலாக பௌத்த தர்மத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பௌத்த நாடான இலங்கையில் 300 முதியோர் இல்லங்கள் காணப்படுகின்றன. 

இவ்வாறான பின்புலத்தில் முதியோர் தொடர்பில் புதிதாக சிந்திக்க வேண்டிய காலக்கட்டமே தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் மிகவும் பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும், ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

No comments:

Post a Comment