மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியின் மூலம் உக்ரைனிலிருந்து வந்த வெளிநாட்டவர்களாக இருக்கலாம் என்று புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள தகவல் 80 சதவீதம் உண்மையாக இருக்கலாம். எனினும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் சரியான மூலத்தை கண்டறியக் கூடியதாக இருக்கும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணி குறித்து புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உக்ரைனிலிருந்து வந்த சிலர் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இது வரையில் 80 வீத அறிக்கைகளே கிடைத்துள்ளன. எனவே இவ்விடயத்தில் 80 சதவீதம் உண்மை உள்ளது.
மினுவாங்கொடை கொத்தணியின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று அண்மையில் நான் தெரிவித்திருந்தேன். வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் மாத்திரமல்ல. வேறு நாட்டவர்களும் இதில் உள்ளடங்குவர்.
எனவே ஓரிரு வாரங்களில் தொற்றுக்கான உண்மையான மூலத்தை கண்டறியக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த கொத்தணிக்கு குறித்த உக்ரைன் பிரஜைகளின் வருகையும் ஒரு காரணியாக இருக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment