நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத் திட்டத்தில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு பிரதேச செயலகங்களுடாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் முதல்கட்ட நியமனத்தில் அதிகளவில் உள்வாங்கப்படவில்லை. இதனால் தகுதியுள்ள பல இளைஞர் யுவதிகள் மன உளைச்சலுடன் காணப்படுகின்றனர் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே.குமாரசிறி கவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத் திட்டத்தில் முதல் கட்ட நியமனத்தில் பிரதேச செயலகங்களுடாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அதிகளவில் உள்வாங்கப்படவில்லை இருந்தபோதும் இரண்டாம் கட்ட நியமனத்திலாவது இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனங்களை வழங்குங்கள் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனைய மாவட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகளினால் பலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டபோதும் அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறு நடைபெறவில்லை. இந்நிலையானது அம்பாறை மாவட்ட தமிழர்கள் அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.
பல இன்னல்களுக்கு மத்தியில் தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாதவர்களே புள்ளிகள் அடிப்படையில் பிரதேச செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிச்சயமாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
எனவே இவர்களது நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment