தீமையிலும் நன்மை காண்போம், அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

தீமையிலும் நன்மை காண்போம், அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அசாதாரண சூழலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தீமையிலும் நன்மையடைவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய நிலையை எதிர்கொள்ள தேவையான மாற்று ஏற்பாடுகளுக்கு சகல விதமான ஏற்பாடுகளையும் வழங்க கடற்றொழில் அமைச்சு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடன் நேற்று (28.10.2020) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்கள் ஆகியோருடன் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாணத்தை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிபாளர்கள், தற்போது கடலுணவு விளைச்சல் அதிகம் பெறப்படுகின்ற காலப்பகுதியாக இருக்கின்ற நிலையிலும் வெளி மாவட்டங்களுக்கான ஏற்றுமதிகள் தடைப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் ஈடுபடுவதை கணிசமானளவும குறைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், உற்பத்தி செய்யப்படுகின்ற கருவாடுகளுக்கு போதிய சந்தை வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றமையினால், கருவாட்டு உற்பத்தியிலும் போதிய ஆர்வம் செலுத்தும் மனோநிலையில் கடற்றொழிலாளர்கள் இல்லை என்பததையும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சதோச விற்பனை நிலையங்ளின் ஊடாக கருவாடுகளை கொள்வனவு செய்வதற்கு கடற்றொழில் அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்திலும் கடற்றொழில் கூட்டுத்தாபனம் கருவாடுகளை கொள்வனவு செய்து சதோசவிற்கு வழங்கும் எனத் தெரிவித்தார்.

அத்துடன் கருவாட்டு உற்பத்தியில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு தேவையேற்படின் இலகு கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று தனியார் நிறுவனங்களோடு கலந்துரையாடி இறால், கணவாய், நண்டு போன்ற கடலுணவுகளையும் நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்துவதில் எந்தவிதமான நெகிழ்வுப் போக்கும் இன்றி கடற்றொழில் திணைக்களத்தினர் உறுதியாக செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும். எல்லை தாண்டுகின்ற இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையின் அண்மைக்காலச் செயற்பாடுகள் தொடர்பாக மகிழ்ச்சி வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த எல்லை தாண்டும் செயற்பாடு தொடருமானால் இரு நாட்டு கடற்றொழிலாளர்களிடையே நடுக்கடலில் மோதல் மூளுகின்ற நிலைமை ஏற்படும் என்று சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு தன்னால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், எல்லை மீறுகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் நாள்தோறும் தனக்கு கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment