பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன - லண்டனிலிருந்து காணொலி மூலம் உரையாற்றினார் நவாஸ் ஷெரீப் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 17, 2020

பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன - லண்டனிலிருந்து காணொலி மூலம் உரையாற்றினார் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் சேர்ந்து தகுதி இல்லாத இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். சிகிச்சைக்காக லண்டனுக்கு நவாஸ் ஷெரீப் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் 11 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக முதல் பிரச்சார கூட்டத்தை நடத்தி உள்ளது.

முதல் அரசாங்க எதிர்ப்பு பேரணி லாகூரிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குஜ்ரான்வாலா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பிடிஎம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, நவாஸ் செரீப் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் லண்டனில் இருந்தவாறு காணொலி மூலம் பங்கேற்ற நவாஸ் செரீப் அதில் பேசியதாவது ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வாதான் என்னுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். 2018ம் ஆண்டு தேர்தலில் இந்த தேசத்துக்கு தகுதியில்லாத இம்ரான் கானை ஆட்சியில் ராணுவம் அமர வைத்தது. நாடு மோசமாக சீரழிந்ததற்கு நேரடியான குற்றவாளியான ஜெனரல் பஜ்வா இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் மக்கள் இன்று சந்திக்கும் துயரங்கள், வேதனைகளுக்கு ஜெனரல் பஜ்வாதான் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய ஆட்சியை கவிழ்த்ததற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பும், ஐ.எஸ்.ஐ தலைவர் ஜெனரல் பியாஸ் ஹமீதுவும் காரணம். என்னுடைய ஆட்சியை கவிழ்த்தற்கு ஹமீதும் பதில் அளிக்க வேண்டும்.

என்னை நீங்கள் துரோகி என்று குற்றம் சாட்டலாம், என் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், பொய்யான வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து நான் என் மக்களின் நலனுக்காகப் பேசுவேன். இம்ரான் கானின் பெயரைக் கூற ஒருபோதும் அஞ்சமாட்டேன். என்னையும், என் குடும்பத்தாரையும் துரோகிகள் என்று இம்ரான் தரப்பு அழைக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. தகுதியில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும்தான் ஆட்சி நடத்துகின்றன. ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் அரசு ஏன் நீடிக்கவில்லை. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐ.எஸ்.ஐ இரு அரசுகள் நிர்வாகத்தில் இருந்தால் யார் பொறுப்பேற்பது? இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார்.

தொடர்ந்து ஒக்டோபர் 18 அன்று கராச்சியில், ஒக்டோபர் 25 ஆம் திகதி குவெட்டாவில், நவம்பர் 22 அன்று பெஷாவர், நவம்பர் 30 அன்று முல்தான், பின்னர் ஒரு பேரணி டிசம்பர் 13 அன்று லாகூரில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment