(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொவிட்-19 வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாளாந்தம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள ஆகாரங்களை உட்கொள்வது மிகவும் அத்தியாவசியமாகும் என போசணை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுவகைகளை எமது ஆகாரத்தில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக விட்டமின் ஏ,சீ, மற்றும் டீ, அடங்கும் உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதனைத்தவிர, சின்க் மற்றும் செலேனியம் கனிப்பொருள் அடங்கிய உணவு வகைகளின் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
பூசணி, கரட், கீரை வகைகள் குறிப்பாக வல்லாரை மற்றும் முருங்கா இலைகளில் விட்டமின் ஏ அடங்குவதுடன் விட்டமின் சீ அடங்குவது புளி ரக பழங்களிலாகும். விசேடமாக தோடம்பழம், தேசிக்காய், நாரங்காய், நெல்லிக்காய், கொய்யப்பழம், பப்பாசி மற்றும் வாழைப்பழம் போன்றவற்றில் விட்டமின் சீ அடங்குகின்றது.
கூனி இராலில் சின்க் எனும் கனிப்பொருள் அடங்குவதுடன் கெளபி மற்றும் பயரு போன்றவற்றில் சின்க் மற்றும் செலேனியம் எனும் கனிப்பொருள் அடங்குகின்றது.
இதனைத்தவிர புரதச்சத்து அதிகமுடைய ஆகாரங்களான மீன், நெத்தலி, முட்டை, கெளபி, கடளை, பயரு மற்றும் கருவாடு போன்றன அதிக புரதச்சத்து அடங்கும் உணவு வகைகளாகும். அத்துடன் விட்டமின் டீ யை பெற்றுக்கொள்ள முடியுமான சிறந்த முறைதான் சூரிய ஒளியாகும்.
நபர் ஒருவர் காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணி வரையான நேரத்துக்குள் 10 நிமிடமாவது சூரிய ஒளியில் இருப்பதன் மூலம் உடலுக்கு தேவையான விட்டமின் டீ யை பெற்றுக் கொள்ள முடியும். மதியம் 12 மணிக்கும் 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பெறப்படும் சூரிய ஒளியிலே விட்டமின் டீ அதிகமாகும்.
No comments:
Post a Comment