(செ.தேன்மொழி)
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு போலி பீதியை ஏற்படுத்தினோம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் ஆளும் தரப்பினர் போலி பீதியையே ஏற்படுத்தி வந்தனர் என்பதை தற்போது நாட்டு மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
தேர்தலை வெற்றி கொள்வதற்காக அரசியல் மேடைகளில் எம்.சி.சி. தொடர்பில் பலவாறு எச்சரித்தனர். ஆனால் அவை அனைத்துமே போலியானவை என்று தற்போது உறுதியாகியுள்ளன.
எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால் நாட்டுக்கு கிடைக்கும் நிதியை வேறு எந்த விடயங்களுக்கும் பயன்படுத்த முடியாது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களுக்கு மாத்திரமே அதனை பயன்படுத்த முடியும்.
எம்.சி.சி. ஒப்பந்தத்தை இலங்கைக்கு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் அது தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பிய கடிதத்தை கூட நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தேன்.
பின்னர் எம்.சி.சி. தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? இவை குறித்த உண்மை விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment