(நா.தனுஜா)
பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகள் கொரோனா வைரஸ் பரவலின் பின்னரான 'புதிய இயல்புநிலைக்கு' தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வதுடன், கொவிட் - 19 காரணமாக ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மீள்வதற்கு ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்றுவது அவசியமாகும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உலகலாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலையில் காரணமாக பல நாடுகளின் அன்றாட நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. எனினும் அந்த முடக்கம் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதனால், தற்போது உரிய சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியவாறு மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.
எனவே தற்போது நடைமுறையில் இருக்கும் இந்த 'புதிய இயல்பு நிலைமையை' பின்பற்றி செயற்படுமாறு இலங்கை பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகளை வலியுறுத்தியிருக்கிறது.
பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான இணையம் மூலமான 21 ஆவது கூட்டத்தின் போதே 'சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடிய புதிய இயல்புநிலையைத் தழுவி நடப்பதுடன், விரைவாக அதற்குப் பழக்கப்பட வேண்டும்' என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
'ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டவாறு கொவிட் - 19 வைரஸ் பரவல் ஆரம்பத்தில் ஒரு சுகாதார நெருக்கடியாகக் காணப்பட்டு, தற்போது அது பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியாக மாற்றமடைந்திருக்கிறது. இது உலகலாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் மீது பல மட்டங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரைப்போன்ற நிலையில் உலகம் தற்போது இல்லை' என்றும் ஜயநாத் கொலம்பகே இதன்போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment