எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மற்றும் நிருவாக நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக தபால் சேவைகள் வெகுஜன ஊடகத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பொன்றினை மாவட்ட செயலத்தில் அண்மையில் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டத்திற்கு அவசியமாகவும் அவசரமாகவும் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகள் தொடர்பாக விரிவான விளக்கமொன்றினையும் கோரிக்கைகளையும் முன்மொழிந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளின் நீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு கித்துள், உறுகாமம் இரண்டு குளங்களையும் இணைப்புச் செய்து அதன் நீர் மட்டத்தினை 90 எம்.சி.எம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும், ஏற்கனவே 55 எம்.சி.எம் உயரத்திலுள்ள அணைக்கட்டுகளை உலக வங்கியின் நிதியில் 58 எம்.சி.எம் வரை தான் உயர்த்துவதாக தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை 90 எம்.சி.எம் மாக உயர்த்துவதாயின் மாத்திரம் இத்திட்டத்தினை முன்னெடுக்கும்படி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் உள்ளன. எனவே, இதனை உடனடியாக முன்னெடுக்கும் போது, மாவட்டத்தில் ஏற்படுகின்ற நீர் தட்டுபாட்டையும் வெள்ள அனர்த்தத்தையும் கட்டுப்படுத்தலாமென்ற ஆலோசனையினை முன்வைத்தார்.
கழுதாவளைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினைச் செயற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதுடன், விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு நியாய விலையினையும் பெற்றுக் கொடுக்க முடியுமென ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையானது, கிழக்கு மாகாணத்திற்கான ஒரேயொரு பெரிய வைத்தியசாலையாகும். அதில் நிலவுகின்ற குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இங்கு அமைக்கப்பட்டுள்ள புற்று நோய் சிகிச்சைப் பிரிவானது எல்லா வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தும் அதனை இயக்குவதில் பெரிய இழுத்தடிப்பு இடம்பெற்று வருவது தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், இங்கு சீ.ரி. இஸ்கேன் இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளதுடன், எம்.ஆர்.ஐ. இயந்திரம் இல்லாமலும் காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் அம்பாரை மற்றும் கண்டி, கொழும்பு போன்ற இடங்களுக்கு இப்பரிசோதனைகளுக்கான மாற்றப்படுகின்றனர். எனவே, இவற்றுக்காக புதிய நவீனரக இயந்திரங்களையும் அதற்கான பயிற்றப்பட்ட நிரந்தர விசேட நிபுணர்களையும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன கிளையொன்றினை (ஒசுசல) மட்டக்களப்பு நகரத்தில் அமைப்பதற்கு பல தடவைகள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் அது கைகூடவில்லை. இப்பிரிவினை அமைப்பதனுடாக வயதான நோயாளிகளுக்கு வசதியக இருக்குமெனச் சுட்டிக்காட்டப்பட்டது.
அது போன்று சதொச விற்பனை நிலையமொன்றை மட்டக்களப்பு நகரில் அமைப்பதற்கான நடவடிக்கையெடுப்பதனுடாக எமது மக்கள் நியாய விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய ஏதுவாக அமையுமென ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
உன்னிச்சைக் குளத்திலிருக்கின்ற நீர் மட்டக்களப்பு நகர்ப்பகுதி மற்றும் ஏனைய புறநகருக்கெல்லாம் வழங்கப்படுகின்ற நிலையில், உன்னிச்சையை அண்மித்த பல பகுதிகளுக்கும் நீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்கும் கிடைக்காமலிருப்பது பாரிய குறையாகவே காணப்படுகின்றதென்பது அவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமானது, தனியார் காணிகளிலும் பாடசாலைக் கட்டடத்திலும் அமைந்துள்ளது. நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையில், தொடர்ந்தும் மக்களின் காணிகளை விடுவிக்காமலிருப்பது ஆரோக்கியமானதல்ல. இராணுவ முகாம் அமைப்பதற்கான காணிகள் புன்னக்குடாவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீள்குடியேற்ற அமைச்சினால் நிதியொதுக்கீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினையும் சுட்டிக்காட்டப்பட்டது.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்தியக் காரியாலயம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதேச காரியாலயமொன்றை மட்டக்களப்பில் அமைப்பதனூடாக மட்டக்களப்பு விவசாயிகள் தங்களின் நெல்லை வழங்குவதற்கு வசதியாக அமையுமெனவும் அரசாங்க அதிபரினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
தபால் சேவைகள் வெகுஜன ஊடகத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இக்குறைபாடுகளை உரிய அமைச்சுக்களுடன் தொடர்புகொண்டு மிக விரைவில் இவற்றுக்கான தீர்வுகளை எமது மாவட்டத்தின் மக்களுக்காக முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment