அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் ஜே.வி.பி. தலைவர், பதில் பொலிஸ்மா அதிபர் ஆஜர் - ரணில், ஹக்கீம், சம்பந்தன், சுமந்திரன், பொன்சேகாவுக்கும் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 7, 2020

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் ஜே.வி.பி. தலைவர், பதில் பொலிஸ்மா அதிபர் ஆஜர் - ரணில், ஹக்கீம், சம்பந்தன், சுமந்திரன், பொன்சேகாவுக்கும் அழைப்பு

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் அநுர குமார, பதில் பொலிஸ் மாஅதிபர்-Anura Kumara Dissanayake-CD Wickramaratne
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர்களை அங்கு முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர்கள் இன்று முற்பகல் அங்கு முன்னிலையாகியுள்ளனர்.

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள, குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த ஆணைக்குழுவில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, அவர்களிடம் வாக்குமூலம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (04) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஊப் ஹக்கீம், ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் 2015 தேர்தலில் ஐ.தே.க. சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தன் ஆகியோருக்கு எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment