(செ.தேன்மொழி)
இந்தியாவிலிருந்து சட்டவிரோதாமாக எடுத்துவரப்பட்ட ஆறு கோடி ரூபா பெறுமதியான 2230 கிலோ கிராம் மஞ்சள் தொகை பேருவளை கடற்கரையோர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று வியாழக்கிழமை குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாக பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன்போது பேருவளை கடற்கரையோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றிலிருந்து 90 மஞ்சள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து 1070 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளும் , 1160 கிலோ கிராம் மஞ்சள் தூலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் குறித்த படகின் காவலாளராக செயற்பட்டு வந்துள்ளதுடன், இவர் முச்சக்கர வண்டியில் மஞ்சளை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை கடந்த மாதம் 11 ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ள குறித்த படகு நேற்று புதன்கிழமையே கரைக்கு வந்துள்ளாகவும், அதன்போது குறித்த படகில் மீன் பிடிக்கச் சென்று 5 பேர் வந்ததாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பயாகலை மற்றும் பேருவலை பகுதிகளைச் சேர்ந்தவர்களே படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளதுடன், அவர்கள் தற்போது அந்த பிரதேசங்களை விட்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment