(செ.தேன்மொழி)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு தேசிய உரிமைகளை அழிப்பதற்காகவா மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்தார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாட்டின் உரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்காக தங்களை வெற்றி பெறச் செய்யுமாறு ஆளும் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கம் உரிமைகளை பாதுகாப்பதை விடுத்து அவற்றை இல்லாதொழிக்கவே முயற்சிக்கிறது.
புனேகபாகு மன்னனின் அரச மண்டபம் இடிக்கப்பட்டு 2 மாதங்களாகின்றன. ஆனால் அந்த விவகாரத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை புத்தளம் - ஆனைவிழுந்தான் பகுதியில் காணப்பட்ட சதுப்பு நிலத்தை சேதம்படுத்திய குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும் பெகோ இயந்திரத்தின் சாரதியும் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடுகளுக்கு பின்னால் அரியல்வாதிகளின் தலையீடு இருக்கும். அவர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உலக உரிமையான சிங்கராஜ வனத்தையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. சிங்கராஜ வனத்தில் பாதை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதனை ஜனாதிபதி பார்வையிட சென்று 'இந்த விடயங்களை இவ்வாறு செய்யுங்கள்' என்று கூறி வந்திருந்தார். ஜனாதிபதி அவ்வாறு தெரிவிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் சூழலியலாளர்களிடம் விளக்கம் பெற்றுக் கொண்டாரா? துறை சார்ந்த நிபுணர்களிடம் எந்த விளக்கத்தையும் பெற்றுக் கொள்ளாது வெறுமனே அங்கு சென்று பார்வையிட்டு வந்ததில் எந்த பயனும் இல்லை.
நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்களே உரிமைகளை இல்லாதொழிக்கின்றனர். இதற்காகவா நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கினார்கள்? பொறுப்புள்ள எதிர்கட்சி என்ற வகையில் நாம் இது தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுப்படுத்துவதோடு, பாராளுமன்றத்திலும் விவாதிப்போம். அதுமட்டுமன்றி இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம்.
அத்துடன், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவது தொடர்பிலும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதனை நீக்குவதற்கான தேவை என்ன ? 19 இல் ஜனநாயக நாடொன்றுக்கு இருக்க வேண்டிய பல பண்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது சிக்கல்கள் காணப்பட்டால் அவற்றை திருத்தம் செய்வதுடன், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கக்கூடாது. இதனை நீக்கி 18 ஆவது அரசியலமைப்பை கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதேவேளை இரட்டை குடியுரிமை தொடர்பில் உள்ள ஏற்பாடுகளும் நீக்கப்படும். அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனநாயக கொள்கைக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாவிட்டால் நாங்கள் அதற்கு ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment