வாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஷ்ட ஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற 'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த வருடம் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய கலந்துரையாடலிலும் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார். .
இது தொடர்பில் பதில் அளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏற்கனவே 6 விதமான பயிர் செய்கைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஏற்பாடுகள் மாத்திரம் விவசாய அமைச்சில் காணப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய, மேற்குறிப்பிட்ட பயிர் செய்கைகளுக்கும் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, எதிர்காலத்தில் குறிப்பிட்ட பயர்செய்கைகள் பாதிக்கப்படும் போது உடனடியாக நஸ்டஈடு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாய அமைச்சின் குறித்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன், அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த அமைச்சரவையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்டஈடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடலில் கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் ஷீந்திர ராஜபக்ஷ, உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுனர் சார்ளஸ், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜனர இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள், விவசாய பணிப்பாளர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல சேவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment