(நா.தனுஜா)
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளடங்கலாக மூன்று அரச நிறுவனங்களின் வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், அரச திறைசேரியிலிருந்து நிதியைப் பெற்று அந்நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன ரூபவாஹினி செய்திச் சேவை ஆகிய நிறுவனங்களின் வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
அதன் காரணமாக அந்நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்குதல் மற்றும் அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்தல் என்பவை நெருக்கடிக்குரியதாக மாறியிருக்கின்றன.
எனவே இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செலவுகளை அரச திறைசேரியில் இருந்து பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி மேற்படி நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சாத்தியமான வழிமுறைகளை ஆராய்வதுடன் அவற்றுக்கு அரச திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment