(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டு எதிர்தரப்பினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது. ஜனாதிபதியுடன் ஒன்றினைந்தே அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம் என வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு சில குறைபாடுகளை கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீரனை செய்யப்பட்டுள்ளது.
தவறுகளுடன் நிர்வாகத்தை முன்னெடுத்தால் அது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 20ஆவது திருத்தத்தை கொண்டு எதிர்தரப்பினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி அணி, பிரதமர் அணி என எவ்வித பிளவுகளும் கிடையாது. பிளவினை ஏற்படுத்த எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
தவறுகள் திருத்திக் கொள்ளப்படும் ஜனாதிபதியுடன் ஒன்றினைந்து பிரதமர் செயற்படுவார். ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியுள்ளார்கள்.
மக்களின் ஆணையை மதிக்காமல் செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலைமைதான் அரசாங்கத்துக்கு ஏற்படும் ஆகவே ஒருபோதும் ஜனாதிபதியும், பிரதமரும் முரண்படாமல் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற ஒன்றினைந்தே செயற்படுவார்கள் என்றார்.
No comments:
Post a Comment