ஐ.நா. கூட்டத்தொடரில் தமிழர் விவகாரத்தில் தமிழ் தரப்பினர் ஒன்றிணைந்து சர்வதேசத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “இப்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அமைத்த பொதுஜன பெரமுனவுடைய ஆட்சியில் தற்போதைய ஜனாதிபதியின் சகோதரர் பிரதமராக வந்துள்ளார்.
இந்தநேரத்தில் அவர்கள், ஜனநாயகத்துக்கு ஆபத்தான 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து முன்மொழிந்துள்ளார்கள். அது, ஒற்றையாட்சி அல்லது ஒரு குடும்ப ஆட்சியாக மாறுவதற்கு பிரதானமான காரணமாக அமையவுள்ளது. அந்த ஒற்றையாட்சியில்தான் தமிழர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஒற்றையாட்சியின் முழு அதிகாரத்தையும் ஒரு குடும்பம் பெற்றுக்கொள்கின்ற முறையில் சரத்துக்கள் மாற்றப்பட்ட வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எங்களுடைய மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற எந்தவொரு செயற்பாட்டையும் நாங்கள் எதிர்ப்பதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.
அதேநேரத்தில், வரும் 2021ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பேரவை கூட்டத்தில் இலங்கை தொடர்பான விடயத்தில் புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து தமிழர் தரப்பு அதனைக் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, அனைவரும் ஒன்றாக இணைந்து ஐ.நா. ஆணையாளரிடம் எமது பிரச்சினையை முன்வைக்க வேண்டும் என்பதுடன் உறுப்பு நாடுகளுடனும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment